Apr 7, 2013

எனது சதுரகிரி மலை புனிதப் பயண அனுபவம் - 3

 
 
 
 
 


நாங்கள் ஐவரும் சுந்தரமூர்த்தி கோயில் வந்து சாமி கும்பிட்டுவிட்டு காளிமுத்து சித்தர் மடத்தில் அன்னதானத்தில் வந்தமர்ந்தோம். வயிறார திருப்தியாக சாப்பாடு கிடைத்தது. நமது சோற்றுச்சித்தர் வயிறு போதும் என்கிற அளவிற்கு உண்டார். உண்ட கழைப்பு தொண்டனுக்கும் உண்டல்லவா? நடந்த கழைப்பு வேறு. ஆசிரம வாயிலில் சிறிது அமர்ந்தோம். 4 மணி அளவில் பாலா வந்தார். காளிமுத்து மடத்தில் அன்னம் முடிந்துவிட்டது. அவர் அருகில் உள்ள வேறு மடத்திற்கு சென்று உணவருந்தி வந்தார்.

சுந்தரமூர்த்தி சந்நிதி வரலாறு: கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது. அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

சுந்தர மகாலிங்கம்

 
மாலை சுமார் 4:30 மணி அளவில் சுந்தர மகாலிங்கம் கோயிலில் பூஜை நடந்தது. நாங்கள் திருப்தியாக சுந்தர மகாலிங்கத்தை மனதார வேண்டிக்கொண்டோம். தேனில் குழைத்த தினை மாவும், சர்க்கரை பொங்கலும் பிரசாதமாக கிடைத்தது. சிறிது நேரத்திலேயே கோயில் சாத்தப்பட்டது. 6:00 மணிக்கு அடுத்த பூஜை என்றார்கள். பிறகு நமது குழுவினர் ஒருவர் ஒருவராக வரத்தொடங்கினார்கள். ஆனாலும் அவர்களுக்கு உணவும், தரிசனமும் உடனடியாக கிடைக்கவில்லை.
 
 
 
 
பார்வதி பூஜித்த லிங்கம்: சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய் விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை: சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

மாலை 5:30 மணிஅளவில் ‘சித்தர் தோரண வாயில்’ – கோவிலின் முகப்புக்கு வந்து விட்டோம். இங்கு பதிணெண் சித்தர்கள் சிலை இருக்கின்றது. பதினெட்டு சித்தர்களுக்கும் ஒரே இடத்தில் சிலை இருப்பது இங்கு மட்டும் தான் – இது ஒரு தனி சிறப்பு. எதிரே நவக்கிரகங்கள் இருக்கிறார்கள். அருகில் சட்ட நாதர் குகை இருக்கிறது. அதன் அருகில் ஒரு இடத்தில் நீள் வட்டமான அமைப்பில் மூன்று கம்பிகளை வைத்து சமையல் செய்கிறார்கள். அதில் இருந்து விழும் சாம்பலை திருநீறாக வழங்குகிறார்கள்.
 
சந்தன மஹாலிங்கம் கோவிலுக்கு வந்து விட்டோம். இங்கு சுயம்பு லிங்கம் சந்தனக் காப்பிடப் பட்டிருக்கிறார். இங்கு சந்தனமும், திருநீறும் பிரசாதமாக வழங்கப் படுகிறது. சுயம்பு லிங்கத்தை பிரகாரம் சுற்றி வரலாம். முன்பு சந்தன மரம் இருந்திருக்கிறது. இப்போது இல்லை. பக்கத்தில் ஆகாச கங்கை அருவி இருக்கிறது. அருவியிலிருந்து வரும் தண்ணீர் தான் இங்கு பூஜைக்கு, சமையலுக்கு, குடிநீருக்கு எல்லாம். அருவிக்கு அடுத்தாற் போல் வினாயகர், முருகன், சந்தன மஹா தேவி எல்லாம் இருக்கிறார்கள். அனைவரையும் தரிசனம் செய்து கொண்டோம்.
 
 
பெரிய மகாலிங்கம், தவசிப்பாறைக்கு செல்லும் பாதையில் கரடித்தொல்லையும், வழியும் சரியில்லாததால் பிறகு பார்த்திக்கொள்ளலாம் என நினைத்து இரவு 7:00 மணிஅளவில் அகத்தியர் ஆசிரமத்தில் அன்னதானம் உண்டபின் அங்கேயே படுத்து உறங்கினோம். பெரிய மகாலிங்கம், தவசிப்பாறைக்கு அருணும், ஹரியும் மட்டும் காலை சென்று வந்தனர். எல்லோரையும் கூட்டிசென்றால் ரயிலை பிடிக்கமுடியாது என்பதாலும் செல்லவில்லை.

 
 
 
பெரிய மகாலிங்கம் 
 



பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் மஞ்சள் ஊத்து தீர்த்தம் உள்ளது. தீர்த்தமும், இப் பகுதியிலுள்ள மண்ணும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. பார்வதி இத்தலத்துக்கு தவம் செய்ய வந்தபோது, உடன் வந்த புஷ்பகை, கெந்தகை, அமிர்தகை, கருணிகை, மிருதுபாஷிகை, சுச்லிகை, சுமுகை என்ற பணிப் பெண்கள் இந்த தீர்த்தத்தில் மஞ்சள் தேய்த்து குளித்ததால் இப்படி இருப்பதாக கூறப்படுகிறது.

தவசிப்பாறை
 

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை நவக்கிரக கல் என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள ஏசி பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் வெள்ளைப்பிள்ளையார் பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
 
காலை எழுந்து காலை கடன்களை முடித்து கீழிறங்க புறப்பட்டோம். அகத்தியர் ஆசிரமத்தில் காலை பொங்கல் போட்டார்கள். திருப்தியாக சாப்பிட்டோம். நமது சோற்றுச்சாமியார் அதற்குள் என்னென்ன ஆசிரமத்தில் என்னென்ன காலை உணவு என விவரித்தார். அவரது database கண்டு வியந்தோம். அகத்தியர் ஆசிரமத்திற்கு எல்லோர் சார்பாகவும் கிரிஷ் Rs. 1000 அன்னதான நன்கொடையாக தந்தார். சிலர் தனியாகவும் தந்தார்கள். வழியில் இயற்கை சாம்பிராணி, மூலிகை திரி சிலர் வாங்கிக் கொண்டனர். பிறகு நடக்கத்தொடங்கினோம்.
 
நேற்று குளித்த இடத்திலேயே இன்றும் குளித்தோம். இங்கு வந்துதான் கைபேசி அலைவரிசை கிடைத்தது. நான் மற்றும் சிலர் வீட்டிற்கு பேசினோம். மேலே சுத்தமாக அலைவரிசை கிடைக்கவில்லை.நிம்மதியாக குளித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாகராஜன் (பாம்பு) எங்களை கல்லுக்கிடையே இருந்து நோட்டம் போட்டுக்கொண்டிருந்தது. திடீரென தண்ணீருக்குள் பாய்ந்தது. பாம்பென்றால் படையும் நடுங்குமல்லவா? நாங்களும் பயந்து உடனடியாக தண்ணிரில் இருந்து வெளியே வந்தோம்.

பிறகு சிறிது ஓய்வெடுத்துவிட்டு கீழே இறங்கி ராஜகாளியம்மன் கோவில் அருகில் வந்து ஹரி, அருண் கும்பலுக்காக காத்திருந்து வந்தவுடன் தாணிப்பாறை வந்து ஷேர் ஆட்டோ மூலம் வத்திராய்ப்பு வந்து பேருந்து மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மதியம் சாப்பிட்டுவிட்டு ஆண்டாள் கோவில் சென்றோம். கோயில் வாசலில் இருந்த வெங்கடேஷ்வராவில் வீட்டிற்கு பால்கோவா வாங்கி கொண்டு கோவில் வாசலில் நடை திறக்காததால் காத்திருந்தோம்.

மாலை சுமார் 4:30 அளவில் ஆண்டாள் அம்மனை தரிசனம் செய்துவிட்டு ஆண்டாள் பிறந்த இடம், சக்கரத்தாழ்வார் கோயில் சென்றுவிட்டு எல்லோரையும் ரயிலடி செல்ல சொல்லிவிட்டு நான், பாலா, கிரிஷ், கார்த்தி நால்வரும் இரவு உணவு வாங்கி கொண்டு ரயிலடி சென்றோம். சுரேஷ் சாரும், அவரது தம்பியும் ஏதோ வெங்கல பாத்திரம் வாங்கிகொண்டு வந்தார்கள். ரயில் வந்தவுடன் எல்லோரும் ஏறி சாப்பிட்டுவிட்டு படுத்தோம்.
திருப்பம் ஏற்படும்: சதுரகிரிக்கு வருபவர்கள் சங்கடப்படுவதில்லை. சித்தர்கள் வாழ்கிற பூமி இது. இங்கே எல்லைத் தெய்வங்களாக வனக்காளி, வனதுர்க்கை உள்ளனர். சுந்தரமூர்த்தியை வழிபட வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும்.

அடுத்த மலையேற்றத்தில் சந்திப்போம்
 

எனது சதுரகிரி மலை புனிதப் பயண அனுபவம் - 2


முந்தைய பகுதி


எனது சதுரகிரி மலை புனிதப் பயண அனுபவம் - 1


சதுரகிரி அமைப்பு

திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் தாணிப்பாறை என்ற வனப்பகுதி உள்ளது. அங்கிருந்து சுமார் 12 கி.மீ. மலைப்பாதையில் நடந்து சென்றால் சதுரகிரியை அடையலாம். சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில் உள்ளது. சதுரவடிவில் மலை சூழ்ந்திருக்க, அதற்குள்ளே இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எங்களுடைய கும்பல் தாணிப்பாறையில் Tea சாப்பிட்டுவிட்டு, மூலிகை வனம் மூலமாக மலையேற்றம் செல்ல காலை 11 மணியளவில் ஆயத்தமானோம். அங்கிருக்கும் வன அலுவலர் கொண்டு செல்லும் பைகளை சோதனை செய்து பிளாஸ்டிக் பேக்குகளை எடுத்துஅங்கேயே வைத்துவிட்டு செல்லும்படி கூறி நமது முகவரி, தொலைபேசி எண்களை நோட்டில் பதிந்து செல்ல சொல்கிறார்கள். அங்கிருக்கும் போர்டில் புலி, கரடி, காட்டெருமை, யானை, நரி, சாம்பல் அணில் காட்டிற்குள் உள்ளதென மிரட்டுகிறது.

 





மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவ சிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்கினோம்.


ஆசீர்வாத விநாயகர்




செல்லும் வழியில் ராஜயோக காளியம்மன், பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வந்தன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். நாங்கள் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து சென்றோம்.
 

ராஜயோக காளியம்மன்
 
சிறிது தூரம் நடந்ததும் ஒரு சிற்றருவியும்,தண்ணீர் தேங்கி நின்று செல்லுமிடமும் வந்தது. நிம்மதியாக குளித்தோம். பசித்தவர்கள் சாப்பிட்டார்கள். சாப்பாடு கொண்டு வந்த பையை பாலு & கோ ராஜகாளியம்மன் கோயில் அருகே மறந்து வைத்து வந்து விட்டார்கள். கார்த்திக் சத்தம் போட பாலு சென்று எடுத்து வந்தார். அங்கே குரங்குகள் வேறு. மகாலிங்கம் அருளால் எதுவும் ஆகவில்லை.
 

 









வழுக்கு பாறை தாண்டிய பின்பு அங்கிருந்து அரை மணி நேரம் நடக்க, ஓரளவு கற்பாறைகள் நிறைந்த பாதை வழியே வந்தால் செயின் பாறைஎன்ற இடம் வரும். இரண்டு பாறைகள் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும். சில நேரங்களில் தண்ணீர் அதிகம் ஓடும். அதனால் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கடக்கலாம். நாங்கள் செல்லும் போது தண்ணீர் அதிகமில்லை. சிறிது நேரம் ஓடும் நீரில் கால் வைத்து நின்றோம். சில்லென்று இருந்தது

சங்கிலிப் பாறையிலிருந்து ஒரு அரை மணி நேரம் நல்ல ஏற்றம் இருக்கும். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கி இளைப்பாறிச் சென்றோம் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.
 

சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசித்தோம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு
காராம் பசுத்தடம்


இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். ஆகவே நாங்கள் ஏற முயற்சிக்கவில்லை.

கோரக்கர் குகை











இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். ஒரு லிங்கத்தில் சிவனும், ஒரு லிங்கத்தில் விஷ்ணுவும் இருப்பதாக நம்பிக்கை.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன்மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும், என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன், என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.


சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது, தாயையும், தண்ணீரையும் பழிக்கக்கூடாதென்பதால் தண்ணீர் சுத்தமாக இல்லாவிட்டாலும் சிறிது எடுத்து தெளித்துக்கொண்டோம்.



இரட்டை லிங்கம்













நாவல் ஊற்று

 
 

ஓரளவு நாம் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோம். நல்ல ஏற்றம் உள்ள வழியில் பாதை நன்கு கற்கள் அடுக்கி, இரு பக்கங்களும் மரங்கள் நமக்கு தோகை பிடித்திருப்பது போன்று, ஒரு குகை போன்ற தோற்றமும் இருக்கும். நன்கு சில்லென்று இருக்கும். நம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். எவ்வளவு வெயில் இருந்தாலும் அங்கு மட்டும் குளிர்ச்சியாக இருந்த்து. இதை அங்கு சென்று அனுபவித்தால் தான் தெரியும்.

பின்னர், பச்சரிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை தாண்டி, சிறிது நேரம் ஓடும் நீரில் கால் வைத்து நின்றோம். சில்லென்று இருந்த நீரில் மீன்கள் காலை கடித்தது மசாஜ் செய்ததுபோல இருந்தது, கால் வலியெல்லாம் பறந்து போனது.

இந்த ஏற்றம் முடிந்தவுடன் பிலாவடி கருப்பசாமி கோவில்இருக்கும். பலா மரத்தின் அடியில் கருப்பசாமி இருக்கிறார். காலங்கி நாதர் என்ற சித்தர் உலோகங்களை தங்கமாக மாற்றியதாகவும், அந்த தங்கங்களை ஒரு கிணற்றில் வைத்திருப்பதாகவும், அந்த கிணற்றுக்கு கருப்பசாமி தான் காவல் தெய்வம் என்றும் ஒரு நம்பிக்கை.

பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும், என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றில் காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது. நமது விருப்பங்களை எல்லாம் சுந்தரலிங்கரிடம் முறையிடுகிறாராம் பலாமரத்தடி கருப்பர். இவரிடம் விண்ணப்பித்த குறைகள் எல்லாம் தீரும் என்பது திண்ணம்.

இங்கு கருப்பசாமியை தரிசனம் செய்து கொண்டு. அடுத்து சற்று தூரம் சென்றால் ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரியும். இடது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சந்தன மஹாலிங்கம்கோவில் இருக்கும். வலது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சுந்தர மஹாலிங்கம்கோவில் இருக்கும்.

 

வனதுர்க்கை கோயில்

 

பிலாவடி கருப்பு கோயில்

 
 
 
நான், கிரிஷ், சோற்றுச்சித்தர் வெங்கடேஷ், குமார் அண்ணா, அருண் சார் ஆகிய ஐவர் குழு சுந்தர மகாலிங்கம் கோயிலை மதியம் 3:00 மணியளவில் அடைந்தோம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகும்.
இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங்களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன.
 
--பயணம் தொடரும்

எனது சதுரகிரி மலை புனிதப் பயண அனுபவம் - 1




29-மார்ச்-2012 (வெள்ளி இரவு) புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி மலை மற்றும் ஆண்டாள் கோயில் சென்று தரிசித்து விட்டு 1-ஏப்ரல்-2012 (திங்கள் காலை) வருவதாக எங்கள் திட்டம். வர இயலாதவர்களை கழித்து விட்டு புதிதாக வந்தவர்களை ஒருங்கினைத்து என்ன என்ன கொண்டு வரவேண்டும், எப்படி போவது என திட்டம் வகுத்து 3 நாட்கள் முன்னரே மின்னஞ்சல் மூலமாக கிரிஷ் (மலையேற்ற அமைப்பாளர்) அனுப்பிவிட்டார். Coach spoc மட்டும் ரயில் டிக்கெட் Print எடுத்தால் போதும் என கிரிஷ் கூறிவிட்டார் (Go Green Policy)

சரவணமுத்துக்குமார் ஆகிய நான், பாலகிருஷ்ணன் என்கிற பாலா, பாலகிருஷ்ணன் என்கிற கிரிஷ் (மலையேற்ற அமைப்பாளர்), திருக்கழுக்குன்றம் சரவணன், NAT என்கிற நட்டு நடராஜ், சிவா, கார்த்திக் ராஜ் மற்றும் அவருடைய நண்பர் வெங்கடேஷ், வெங்கடேஷ்மணி, அருண் சார், சுரேஷ் சார் மற்றும் அவருடைய தம்பி, கிரிஷ் உடைய HP நண்பர்கள் அருண், ஹரி, முத்து பாலாஜி மற்றும் ஜியாதீன், கிரிஷ் உடைய அண்ணன் அருள்மணி, அவரது நண்பர்கள் குமார், ராம்குமார், மற்றும் ஞானசேகர், பாலு மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் என நாங்கள் மொத்தம் இருபத்து ஆறு பேர் கொண்ட பெரிய கும்பல் சதுரகிரி சென்று மகாலிங்கத்தை தரிசனம் செய்து விட்டு, மலையேற்றத்தின் மூலம் உடலை வலுவேற்றலாம் என புறப்பட்டோம்.

இம்முறை வெள்ளிங்கிரி மலை வந்த சுவாமி, ராம்ஜி, பருவதமலை வந்த ரமேஷ் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த முறை வரவில்லை. அதற்கு பதிலாக வேறு சில நண்பர்கள் இணைந்து கொண்டார்கள். மலையேற்ற அமைப்பாளர் கிரிஷ் 26 பேரையும் கவனிக்க இயலாததால் Coachக்கு ஒருவர் என SPOC பிரித்து விட்டார். கிரிஷ், சிவா, பாலு தலைமையில் மூன்று Team.

கிரிஷ் வெள்ளி இரவு உணவை (இட்லி, சப்பாத்தி)ஆள் வைத்து தயார் செய்து 35 பொட்டலங்களாக கட்டி எடுத்துக்கொண்டார். கிரிஷ், பாலா, பாலு மற்றும் குமார் அண்ணா ஆகிய நால்வரும் சனி இரவு மலையில் அனைவரும் சாப்பிட புளியோதரையும் வீடுகளில் செய்து பொட்டலங்களாக பிரித்துக் கொண்டனர். மேலும் பாதி ரொட்டி & 2 ஜாம் என ஒவ்வொருவருக்கும் சிற்றுண்டி வேறு. இதுவெல்லாம் போதாதென்று சதுரகிரி கஞ்சிமடத்திற்கு போன் செய்து அன்னதானத்திற்கு வேறு கிரிஷ் ஏற்பாடு செய்து விட்டார். ஆக போஜனத்திற்கு பஞ்சமில்லை. ஆரம்பம் முதலே சாப்பாட்டைப்பற்றி பேசி வந்த நண்பர் வெங்கடேஷ்மணிக்கு இதில் அளவில்லா ஆனந்தம். அலுவலகத்திலேயே காபி குடிக்க 2 லிட்டர் mug எடுத்து வருபவராயிற்றே. ஆகவே அவருக்கு சோற்றுச்சித்தர் என்ற பட்டத்தை நமது மலையேற்றக்குழுவின் மூலம் வழங்குவதில் பெருமை அடைகிறோம்.





சோற்றுச்சித்தர்



29-மார்ச்-2012 அனைவரும் எழும்பூர் ரயிலடியில் ஒன்று சேர்ந்து 12661 – பொதிகை ரயிலில் இரவு 8:05 அளவில் புறப்பட்டோம். திருக்கழுக்குன்றம் சரவணன் செங்கல்பட்டிலும், NAT என்கிற நட்டு நடராஜ் தாம்பரத்திலும் ஏறுவதாக கூறினார்கள். அனைவரும் Original Identity card கொண்டு வரச்சொல்லியும் சிலர் மட்டுமே கொண்டுவந்தனர். Ticket மட்டும் நிறைய பேர் Print எடுத்து வந்தனர். சிவா Coachல் 12 பேரில் Original Identity card அனைவரிடமும் இல்லாததால் ஒரு PNRல் Problem. சிவா மொத்தமாக காட்ட TTRக்கு சந்தேகம் வந்து விட்டது. அவர் நிறைய கேள்விகள் கேட்க சிவா பதற்றமாகி விட்டார். எல்லோரும் போய் அவரவர் சீட்டில் அமருங்கள் நான் வந்து தனித்தனியாக் செக் செய்கிறேன் என கூறிவிட்டார். 6 பேர் கொண்ட PNR ல் நடராஜ் இடம் மட்டுமே Original Identity card இருந்தது. அவரோ தாம்பரத்தில் தான் ஏறுவார். என்ன செய்வதென தெரியவில்லை. மற்றவர்களிடம் நகல் மட்டுமே உள்ளது. TTR செக்கப் செய்து கொண்டே வர தாம்பரம் வந்துவிட நடராஜ் Coach ல் ஹீரோ போல் ஏறி காப்பாற்றிவிட்டார். பிறகு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு உறங்கினோம்.
 
 

காலை 7:00 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயிலடியில் இறங்கி Tea சாப்பிட்டுவிட்டு ஷேர் ஆட்டோ மூலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் வந்து காலை கடன்களை முடித்து வத்திராய்ப்பு செல்லும் பேருந்தில் ஏறி வத்திராய்ப்பு வந்து காலை டிபன் முடித்துவிட்டு கொஞ்சம் டிபன், புளியோதரைக்கு வடை பார்சல் செய்து கொண்டோம். தாணிப்பாறை செல்ல மினி பேருந்து வந்தது. 26 பேர் சாப்பிட்டு வருவோம் என ஓட்டுனர், நடத்துனரிடம் கூற புறப்பட்ட பேருந்தை 20 நிமிடம் நிறுத்திவைத்து எங்களை அழைத்துசென்றார். இவ்வாறாக மகாலிங்கம் அருளால் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தாணிப்பாறை சென்றடைந்தோம். இங்கிருந்து தான் மலையேற்றம் ஆரம்பம் ஆகிறது. தாணிப்பாறையிலிருந்து அடிக்கடி மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கின்றன.





 


--பயணம் தொடரும்