May 30, 2017

குழந்தைக்கு பெயர் சூட்டுதல் முதல் பள்ளியில் சேர்ப்பது வரை... எந்த நட்சத்திர - நாளில் தொடங்கலாம்?

குழந்தைக்கு பெயர் சூட்டுதல் முதல் பள்ளியில் சேர்ப்பது வரை... எந்த நட்சத்திர - நாளில் தொடங்கலாம்?


பதினாறு செல்வங்களில் மிக முக்கியமான செல்வம் குழந்தைச் செல்வம் என்பார்கள். அந்த பிள்ளைச் செல்வத்தைப் பெற்றெடுத்தால் மட்டும் போதுமா? குழந்தைக்குச் செய்ய வேண்டியவற்றை நாம் சரியான  நாள்களில் செய்யவேண்டும். எந்தெந்த நாள்களில் என்ன செய்யலாம் என்பது பற்றி திருமலைதிருப்பதி தேவஸ்தான பஞ்சாங்க ஜோதிட பிரகஸ்பதி பராசரம் பாலசுப்பிரமணியம் கூறும் தகவல்களின் தொகுப்பு இது.


குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கேற்ற நட்சத்திரங்கள்:                                                                                                              

குழந்தை பிறந்து 10, 12 மற்றும் 16வது நாளில் பெயர் சூட்டுவதற்கான சடங்கை மேற்கொள்வது நல்லது. திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் ஜாதகக் கட்டத்தில் எட்டாமிடம் சுத்தமாக இருக்கும் சுபமான லக்னங்களில், துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி மற்றம் திரயோதசி ஆகிய திதிகளில், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம்ம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று வருமாறு பார்த்து குழந்தைக்கு நாமகரணம் சூட்டுவது நல்லது.  ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகள் சிறந்தவை.



குழந்தையைத் தொட்டிலில் இடுதல்:

பச்சிளம் குழந்தைகள் ஒரு நாளைக்கு  பதினாறு மணி நேரம் தூங்குவது அவர்கள் உடல் வளர்ச்சிக்கு அவசியம். குழந்தைகள் ஓய்வுகொள்ள தொட்டிலிடும் நிகழ்ச்சி முக்கியம். அந்த நிகழ்ச்சியை குழந்தை பிறந்த 10, 12, 16, மற்றும் 22ம் நாளில் தொட்டிலில் இடுவது வழக்கம். இதற்கு ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, நட்சத்திரங்களும் துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி  ஆகிய திதிகளில் ஏதேனும் ஒன்றும் வருமாறு நாளைத் தேர்வு செய்யவேண்டும். அந்த நாளுக்கு சுபகோள்கள் பார்வையுள்ள லக்னமும் எட்டாமிட சுத்தமும் முக்கியம்.

அரைஞாண் கயிறு அணிவித்தல்:

வெள்ளி அல்லது பொன் அரை ஞாண் கயிற்றை புண்ணியாஹவசனம் செய்யும் நாளன்று அல்லது ஐந்தாவது மாதத்தில் கட்டலாம். அவ்வரைஞாணுடன் கருகமணி, செப்புக்காசு கட்டினால், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுப திதிகள், சுப லக்னத்தில் அரைஞாண் கயிறு அணிவித்தால், குழந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கும். எருக்கஞ்செடியின் நாரினால், அரைஞாண் கயிறு கட்டினால், குழந்தை அடிக்கடிப் பாலைக் கக்குவது நிற்கும் என பாட்டி வைத்தியம் கூறுகிறது.

அன்னம் ஊட்டுதல் (அமுதூட்டல்):

தாயமுதால் வளரும் குழந்தைக்கு சிறந்த உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த நாளைத் தேர்ந்தெடுப்பது மரபு. இது, 6, 8, 9 அல்லது     12-வது மாதத்தில் அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும் துவிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும்  திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இதற்கும் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னம் பலம் வாய்ந்ததாக இருத்தல் அவசியம்.


முடிக்காணிக்கை செய்வது எப்போது?

நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ  முடிக்காணிக்கை செய்யும் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.  இதை 3 அல்லது 5ம் ஆண்டு செய்வது வழக்கம். வளர்பிறை மிகவும் ஏற்றது. துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரியோதசி ஆகிய திதிகளிலும், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி,  உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளும், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய லக்னங்களும்  முடிக்காணிக்கை செய்வதற்கு ஏற்றவை. ஜாதகக் கட்டத்தில் எட்டாமிடம் சுத்தமாக இருத்தல் அவசியம். ஏழில் சூரியன், செவ்வாய் இருக்கக்கூடாது.


காது குத்தும் நிகழ்ச்சி:

உடல்நலத்துக்கு, வளர்ச்சிக்கும், நோய் நிவாரணத்துக்கும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. மிகவும் உயர்ந்த நிலையை எட்டிய நமது முன்னோர்கள் இதைக் கருத்தில்கொண்டுதான் காதுகுத்தும் நிகழ்ச்சியை குழந்தைப் பருவத்திலேயே செய்தனர். 6, 7 அல்லது 8 - ம் மாதத்தில் பகலில் செய்ய வேண்டும். இரண்டு திதிகள் இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும். மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களும் காது குத்தும் நிகழ்ச்சியை செய்வதற்கு ஏற்றவை.  ஜாதகக் கட்டதில் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும்.


கல்வி கற்க என்றைக்கு அனுப்ப வேண்டும்?

கல்வியின் சிறப்பைக் கூறுமிடத்து எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பார்கள். ஐந்தாவது வருடத்தில் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில்  செய்வது உத்தமம் எனப் பெரியோர்கள் கூறுவார்கள். அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி,  திருவோணம், அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, ஆகிய திதிகளும், மிதுனம், கடகம், மகரம், மீனம் ஆகிய லக்னங்களும் கல்வி கற்க பள்ளியில் சேர்க்க ஏற்றவை. ஜாதகக் கட்டத்தில்  நான்கு எட்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கக்கூடாது. லக்னத்தையும், நான்காமிடத்தையும் சுபகோள்கள் பார்த்தல் உத்தமம்.

May 27, 2016

இன்றைய சூழலில் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?

இன்றைய சூழலில் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?
மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். 

எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம்
 பெருமளவில் குறைந்து போவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான். பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும். 
http://media.webdunia.com/_media/ta/img/article/2016-05/27/full/1464346109-7474.jpg
 

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம். நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.


May 7, 2014

திருமண நிதியுதவி பெறுவது எப்படி?



திருமண நிதியுதவி பெற யாருக்கு விண்ணப்பிப்பது? எத்தனை நாட்களுக்குள் விண்ணப்பிப்பது?

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே இதன் நோக்கம். கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம். திருமண நிதியுதவி பெற யாருக்கு விண்ணப்பிப்பது? எத்தனை நாட்களுக்குள் கலப்புத் திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிப்பது ஆகிய விவரங்கள் இங்கே...

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)திட்டம் 1- மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம். தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்

தேவையான சான்றுகள்:
* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் - திட்டம் 1.
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று - திட்டம் 2.

யாரை அணுகுவது?
*மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம்.

*தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்
ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
*திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
*திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் :
1)திட்டம் 1- கல்வித்தகுதி தேவையில்லை.
2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

நிபந்தனைகள் :
1)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2)விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
3)மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.
4)மணப்பெண்ணின் தாயிடம் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிட்டால், மணமகள் பெயரில் வழங்கலாம்.

தேவையான சான்றுகள்:
* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் - திட்டம் 1.
* பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற)

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்
தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் :
1)ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டத்திற்கான தகுதிகளே இத்திட்டத்திற்கும் பொருந்தும்.
2)வருமான வரம்பு இல்லை.
3)மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.

தேவையான சான்றுகள்:
1)சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம் அல்லது தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்.
2)விண்ணப்பதாரரின் வயதுச் சான்று.
3)பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).

குறிப்பு: விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். திருமணத்தன்றோ, திருமணத்திற்குப் பிறகோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது மேற்கூறிய மூன்று திட்டங்களுக்கும் பொருந்தும்.

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2- 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)வருமான வரம்பு இல்லை.

4)மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமனின் வயது நாற்பதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
* விதவைச் சான்று
* மறுமணப் பத்திரிகை
* மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்று
* திருமணப் புகைப்படம்
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி, இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)பிரிவு 1- புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து, பிற இனத்தவரை மணந்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.

2)பிரிவு 2- புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

3)திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

4)திட்டம்2-பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு, எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

5)வருமான வரம்பு இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
* திருமணப் பத்திரிகை அல்லது திருமணப் பதிவுச் சான்று
* மணமகன் அல்லது மணமகளின் ஜாதிச் சான்று
* மணப்பெண்ணின் வயதுச் சான்று
* பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).
குறிப்பு : அனைத்துத் திட்டங்களுக்கும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
*சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. http://www.chennaicorporation.gov.in/moovaloor/appl_form_step1.jsp என்கிற இந்த இணைப்பில் சென்று, விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

*விண்ணப்பம் கிடைக்கவில்லையென்றாலோ, விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்கவில்லையென்றாலோ இந்தியன் குரல் அமைப்பை தொடர்புகொள்ளலாம். தொடர்புக்கு: 94443 05581

 

நன்றி: புதியதலைமுறை

 

பிறந்த தேதி, பெயர் மாற்றம் செய்வது, ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் பெறுவது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
 
பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு - சந்திர குமார் என்ற பெயர் சந்திரா குமார் என்றிருத்தல்)

ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம் செய்ய வேண்டுமாயின் அரசிதழில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

கட்டணம்
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ. 415/- மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ. 50/- மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ. 65/-

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாக செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002, என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம் செலுத்தலாம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், ‘என்கிற’ (Alias) என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படிப் பெறுவது?
அரசிதழை நேரில்பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடுமுன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), சென்னை-2 இல் 2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

www.stationeryprinting.tn.gov.in/service_to_public.htm> என்கிற தளத்திற்கு சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

www.stationeryprinting.tn.gov.in/forms.htm> என்கிற தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
 
 
பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
 
 
பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்ட சிவில்(முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லூரி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பத்தாம் / பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி
Government of Tamil Nadu
Directorate of Government Examination
DPI Complex, College Road, Chennai – 600 006
Telephone: +91-44- (0), 28272088
Email: dge@tn.nic.in

கட்டணம் மற்றும் மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.


ஜாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி?


 
தமிழக அரசு தமிழ்நாடு ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாத் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ்.

மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மதம் மாறினால்:
மாணவர்களின் பெற்றோர் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது ஜாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

எங்கே விண்ணப்பிப்பது?
வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்

ஜாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் துணை வட்டாட்சியருக்கும், எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் வட்டாட்சியருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் கோட்டாட்சியருக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.


வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி?


 
ஆண்டு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழே வருமானச் சான்றிதழாகும்.

வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன.

ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் பத்து ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும்.

தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஒட்ட வேண்டியது இல்லை.

விண்ணப்பத்துடன் வருமானத்திற்கான ஆதாரம் குறித்து எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும்.

வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார்.

குறிப்பு:
வருமானச் சான்றிதழ் தவிர ஜாதிச் சான்றிதழுக்கோ எவ்விதக் கட்டணமுமில்லை.

பள்ளி / கல்லூரி ஆரம்பிக்கும் மாதங்களில் விண்ணப்பிக்காமல் முன்னரே விண்ணப்பித்து பெற்றுவைத்துக் கொள்வது நல்லது.



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?


 
இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. அத்துடன் ஆன்லைனில் பதிவு செய்தால் அலைச்சல் மிச்சம். காத்திருக்க வேண்டிய அவசியம் மட்டுமல்ல. நேரமும் வீணாவதைத் தடுக்கலாம். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் கூட தங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவோ, அப்டேட் செய்து கொள்ளவோ செய்யலாம். தளத்துக்குச் செல்ல http://tnvelaivaaippu.gov.in/Empower

பொதுவாக 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்புப் பதிவுக்காக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர். இதனால் காத்திருப்பு, காலதாமதம், நேரம், அலைச்சல் அனைத்துமே தவிர்க்க முடியாததாக இருந்தது. இதனைத் தவிர்க்க அந்தந்தப் பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கும் பள்ளியிலேயே அவர்களின் கல்வித்தகுதி ஆன்லைனில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் பதிவு செய்யப்படும். மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, ஜாதி விவரம், குடும்ப அட்டை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ் எண் ஆகிய விவரங்களை பதிவுசெய்து அப்போதே வேலைவாய்ப்பு பதிவு அட்டையும் கொடுக்கப்பட்டுவிடும்.

இதன்படி ஆன்லைனிலும் ஒரே நேரத்தில் பதிவு செய்யும்போது காலதாமதம் ஏற்படும். இதனைத் தவிர்க்க பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களிடம் முன்கூட்டியே விவரங்கள் பெற்று கணினியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், மதிப்பெண் சான்றிதழ் எண் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் மே 2-ஆம் தேதிக்குள் சேகரிக்க வேண்டுமெனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் அந்த எண்ணை மட்டும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

இதன்படி வெவ்வேறு நாட்களில் பதிவு செய்தாலும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே நாள் பதிவுமூப்பு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 

நன்றி: புதியதலைமுறை