எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 4
திருக்கழுக்குன்றம் சரவணன் (மணப்பெண் தேவை)
நண்பர் சரவணன் மேலே ஏறும் போதும் சரி, இறங்கும் போதும் சரி எங்குமே உட்காரவே இல்லை. அவருக்கு கூடிய விரைவில் மல்லிகார்ஜீனர் அருளால் நல்ல மண வாழ்க்கை அமைய எல்லோரும் வேண்டிக்கொண்டோம். வீசிங் பாலா எந்த முக்கலும் முனகலும் இல்லாமல் ஏறி இறங்கி விட்டார். அருண் வழக்கம் போலவே யாரையும் பற்றி கவலைப்படாமல் ஏறும் போதும் இறங்கும் போதும் எல்லோருக்கும் முன் நண்பர் ஹரியுடன் சென்று விட்டார்.
Tour Organiser பாலகிருஷ்ணன் என்கிற கிரிஷ்
Tour Organiser கிரிஷ் இம்முறை மலையேறும் போதும் இறங்கும் போதும் செருப்பு போட்டு கொண்டு வந்தது ஆச்சரியம் (எல்லா மலையும் இறைவன் வாழுமிடம் என கூறுவார்). கிரிஷ் அண்ணன் அருள்மணி அண்ணன் நல்ல உடம்பு. ஆனாலும் அவர் நிறைய முறை பர்வத மலையும் மற்ற சிவ மலைகளுக்கும் சென்று வருவது உடம்பு ஒரு பொருட்டே இல்லை. மனமிருந்தால் மார்கமுண்டு என உணர்த்துகிறது.
ரமேஷ், பாலு இம்முறைதான் எங்களுடன் வருகிறார்கள். அவர்களைப் பற்றி முழுவதாக தெரியவில்லை. கஷ்டப்படாமல் நடந்தார்கள். பாலு கொண்டு வந்த புளியோதரை தான் எங்களுக்கு இரவு உணவு. கொண்டு வந்தது எங்கே வீணாகி வீட்டிற்கு திரும்ப கொண்டு போகவேண்டுமோ என பயந்து கொண்டே வந்தார். நல்ல வேளை காலியாகி விட்டது. அவர் வீட்டம்மாவிடம் அவருக்கு அடி தப்பித்தது.
பக்தி இருந்தால் காரியம் சித்தியாகும் என்பது உண்மைதான். கால்தான் சரியான வலி. ஊன்ற முடியவில்லை. பாதம் பாளம் பாளமாகப் பிளந்து எரிந்தது.
Trip முடித்து மாலை 5:45 அளவில் வேலூர் பொற்கோவில் சென்றால் செம கூட்டம். நின்றால் மூன்று, நான்கு மணி நேரமாகிவிடும் என நினைத்து போகவில்லை. காலும் சரியான வலி வேறு. அருள்மணி அண்ணா, குமார் அண்ணா, அருண், ஹரி மட்டும் உள்ளே Queue வில் சென்று சாமி கும்பிட்டு வந்தார்கள். நாங்கள் வெட்டியாக வேனில் 2 1/2 மணிநேரம் காத்திருந்தோம். பிறகு இரவு 8.30 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு வேனிலேயே பாலு கொண்டு வந்த புளியோதரையை சாப்பிட்டுவிட்டு ஒவ்வொருவரையும் அவர்கள் வீடுகளில் விட்டு விட்டு நான், கிரிஷ், குமார் அண்ணா, அருண் மட்டும் 12:30 மணி அளவில் CSC-PKT அண்ணாசாலை வந்து வேனுக்கு பணம் கொடுத்து விட்டு 1:15 அளவில் வீடு வந்து சேர்ந்தோம்.
மலை ஏறும் அளவிற்கு உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் யாவரும் வாழ்வில் ஒரு முறையாவது இங்கு சென்று இறைவன் அருள் பெற வேண்டுகிறேன். வெறுமனே மலை ஏற / இயற்கையைக் காண ஆர்வமிருப்பவர்களுக்கு பர்வத மலை ஒரு அருமையான இடம், உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை ஒரு வரப்பிரசாதம் தான் உங்களை வரவேற்கிறது!. எந்த உயரமான மலையைப் பார்த்தாலும் எனக்குத் தோன்றுவது இதுதான்: எந்த உயரமும் அடையக்கூடியதே!
குறிப்புகள் :
- இம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது
- அடிவாரத்திலிருந்து மேலே சென்று பூஜை செய்துவிட்டு வர 8 மணி நேரம் போதுமானதாகும். சிலருக்கு அதற்கும் மேலேயே ஆனாலும் ஆகும்.
- மலைமீது குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது.(இயற்கை உபாதையை கழிக்க கூட இடம் இல்லை)
- நாமே கீழிருந்து புறப்படும் போது தண்ணீர், குளுகோஸ் பவுடர், பிஸ்கட், பழம், பூஜைப்பொருட்கள் அனைத்தும் வாங்கிச் செல்ல வேண்டும். தேவைப்பட்டால் ஸ்வெட்டர், மலைக்கோட்டு.
- இரவு நேரத்தில் மலை ஏற இறங்க நினைப்பவர்கள் டார்ச் லைட் கொண்டு செல்ல வேண்டும்.
- மற்ற மலைகளைவிட ஏறுவதற்கு சற்று கடினமான மலை இது. சில இடங்களில் இரும்பு ஏணியின் மூலம் ஏறிச்செல்லவேண்டும். சாதாரணமாக வீட்டில் உள்ள மாடிப்படியில் ஏறி இறங்க முடியாதவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் இந்த மலைப்பயணத்தை தவிர்த்துவிட்டு அடிவாரத்தில் இருந்தே தரிசனம் செய்வது நல்லது. இருதய நோய் உள்ளவர்களும் இப்படியே தரிசனம் செய்வது நலம். மல்லிகார்ஜுனர் அருள் கட்டாயம் உண்டு.
- எந்தவொரு மலைப்பயணமாக இருந்தாலும் முன்பின் சென்றவர்கள் உடன் செல்வது நல்லது. அல்லது தெளிவாக புரோகிராம் சார்ட் செய்து கொண்டு பயணப்படுவது நலம்.
- எல்லாவற்றிற்கும் மேலாக யாத்திரைக்கு அந்த மகேசனின் அருள் வேண்டி பிரார்த்தித்துவிட்டு சென்று வருவது நலம்.
- பர்வதமலை குறித்து கூகுளில் சர்ச் செய்தால் நிறைய விபரம் கிடைக்கும்.