May 7, 2014

திருமண நிதியுதவி பெறுவது எப்படி?



திருமண நிதியுதவி பெற யாருக்கு விண்ணப்பிப்பது? எத்தனை நாட்களுக்குள் விண்ணப்பிப்பது?

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே இதன் நோக்கம். கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம். திருமண நிதியுதவி பெற யாருக்கு விண்ணப்பிப்பது? எத்தனை நாட்களுக்குள் கலப்புத் திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிப்பது ஆகிய விவரங்கள் இங்கே...

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)திட்டம் 1- மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம். தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்

தேவையான சான்றுகள்:
* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் - திட்டம் 1.
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று - திட்டம் 2.

யாரை அணுகுவது?
*மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம்.

*தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்
ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
*திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
*திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் :
1)திட்டம் 1- கல்வித்தகுதி தேவையில்லை.
2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

நிபந்தனைகள் :
1)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2)விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
3)மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.
4)மணப்பெண்ணின் தாயிடம் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிட்டால், மணமகள் பெயரில் வழங்கலாம்.

தேவையான சான்றுகள்:
* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் - திட்டம் 1.
* பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற)

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்
தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் :
1)ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டத்திற்கான தகுதிகளே இத்திட்டத்திற்கும் பொருந்தும்.
2)வருமான வரம்பு இல்லை.
3)மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.

தேவையான சான்றுகள்:
1)சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம் அல்லது தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்.
2)விண்ணப்பதாரரின் வயதுச் சான்று.
3)பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).

குறிப்பு: விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். திருமணத்தன்றோ, திருமணத்திற்குப் பிறகோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது மேற்கூறிய மூன்று திட்டங்களுக்கும் பொருந்தும்.

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2- 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)வருமான வரம்பு இல்லை.

4)மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமனின் வயது நாற்பதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
* விதவைச் சான்று
* மறுமணப் பத்திரிகை
* மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்று
* திருமணப் புகைப்படம்
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி, இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)பிரிவு 1- புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து, பிற இனத்தவரை மணந்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.

2)பிரிவு 2- புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

3)திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

4)திட்டம்2-பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு, எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

5)வருமான வரம்பு இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
* திருமணப் பத்திரிகை அல்லது திருமணப் பதிவுச் சான்று
* மணமகன் அல்லது மணமகளின் ஜாதிச் சான்று
* மணப்பெண்ணின் வயதுச் சான்று
* பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).
குறிப்பு : அனைத்துத் திட்டங்களுக்கும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
*சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. http://www.chennaicorporation.gov.in/moovaloor/appl_form_step1.jsp என்கிற இந்த இணைப்பில் சென்று, விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

*விண்ணப்பம் கிடைக்கவில்லையென்றாலோ, விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்கவில்லையென்றாலோ இந்தியன் குரல் அமைப்பை தொடர்புகொள்ளலாம். தொடர்புக்கு: 94443 05581

 

நன்றி: புதியதலைமுறை

 

No comments: