Nov 26, 2024

இறந்தவரின் ஆதார், பான் கார்டு ஆவணங்கள் என்ன ஆகும்..? அவசரப்பட்டு தூக்கி போடாதீங்க..!

இறந்தவரின் ஆதார், பான் கார்டு ஆவணங்கள் என்ன ஆகும்..? அவசரப்பட்டு தூக்கி போடாதீங்க..!


இந்தியாவில் ஆதார் கார்டு, பான் கார்டு , வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை ஒரு நபருக்கான மிக முக்கிய அடையாள ஆவணங்களாக இருக்கின்றன. ஒருவேளை ஒரு நபர் இறந்துவிட்டால் அவர்களின் இந்த அடையாள ஆவணங்கள் என்ன ஆகும்? என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

ஆதார் கார்டு: இந்திய குடிமக்களுக்கு அரசு வழங்கக்கூடிய ஒரு தனித்துவமான அடையாள எண் இதுவாகும். இதனை அடையாள ஆவணமாகவும் , முகவரி சான்றாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். நம்முடைய வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை, இபிஎப் கணக்கு , எல்பிஜி சிலிண்டருக்கான மானியம், ஸ்காலர்ஷிப் என பல்வேறு நலத்திட்டங்களிலும் ஆதார் எண்ணானது இணைக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைக்கு ஒரு நபர் இறந்து விட்டால் அவருடைய ஆதாரை செயலிழக்க செய்வது அல்லது ரத்து செய்வது தொடர்பான எந்த ஒரு பிரிவும் செயல்பாட்டில் இல்லை. ஆனால் ஒருவரது ஆதார் எண்ணை முறைகேடாக யாரும் பயன்படுத்தாமல் இருப்பதை தடுக்க அவர்களின் வாரிசுதாரர்கள் UIDAI இணையதளம் வாயிலாக அந்த நபரின் பயோமெட்ரிக் டேட்டாக்களை லாக் செய்ய முடியும்.

பான் கார்டு : வருமான வரி கணக்கு தாக்கல் ,வங்கி கணக்கு, டிமேட் கணக்கு மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபர் இறந்து விட்டால் அவருடைய வங்கிக் கணக்கினை முடிப்பது, குறிப்பிட்ட சில நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, டிமாட் கணக்கில் உள்ள பங்குகளை மாற்றுவது என்பன உள்ளிட்டவற்றுக்கு பான் அட்டை மிகவும் கட்டாயம்.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு வாரிசுதாரர்கள் Assessing Officerக்கு ஒரு விண்ணப்பம் செய்து பான் அட்டையை சரண்டர் செய்து விடலாம். ஆனால் அனைத்து அவர் சம்பந்தப்பட்ட சொத்து மற்றும் நிதி பரிவர்த்தனைகள் அனைத்தையும் முடித்த பிறகு தான் இதனை செய்ய வேண்டும். 

வாக்காளர் அட்டை: ஒரு நபர் இறந்துவிட்டால் அவருடைய வாக்காளர் அடையாள அட்டையானது உடனடியாக ரத்து செய்யப்படும். இதற்காக உள்ளூரில் இருக்கும் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று படிவம் 7ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் .இத்துடன் இறப்பு சான்றிதழையும் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்து விட்டால் தேர்தல் ஆணையம் இந்த நபரின் பெயரை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடும்.

பாஸ்போர்ட்: பாஸ்போர்டை பொறுத்தவரை அதனை சரண்டர் செய்யவோ அல்லது ரத்து செய்ய வேண்டிய தேவையோ இருக்காது. அதற்கான காலாவதி காலம் வந்தவுடன் அது தானாகவே காலாவதி ஆகிவிடும்.

ஓட்டுநர் உரிமம்: இறந்த நபரின் பெயரில் இருக்கும் வாகனங்களை பெயர் மாற்றம் செய்வதற்கு இந்த ஓட்டுனர் உரிமம் ஆனது கட்டாயம். எனவே அருகில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று இறந்தவரின் பெயர் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து அவர் பெயரில் இருக்கும் வாகனங்களை வாரிசுதாரர்கள் தங்களின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். 

ஒரு நபர் இறந்த உடன் ஆதார் , பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை உடனடியாக தூக்கி போடாமல் அவற்றை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஏனெனில் பிற்காலத்தில் அவை கண்டிப்பாக பயன்படும்.