May 30, 2017

குழந்தைக்கு பெயர் சூட்டுதல் முதல் பள்ளியில் சேர்ப்பது வரை... எந்த நட்சத்திர - நாளில் தொடங்கலாம்?

குழந்தைக்கு பெயர் சூட்டுதல் முதல் பள்ளியில் சேர்ப்பது வரை... எந்த நட்சத்திர - நாளில் தொடங்கலாம்?


பதினாறு செல்வங்களில் மிக முக்கியமான செல்வம் குழந்தைச் செல்வம் என்பார்கள். அந்த பிள்ளைச் செல்வத்தைப் பெற்றெடுத்தால் மட்டும் போதுமா? குழந்தைக்குச் செய்ய வேண்டியவற்றை நாம் சரியான  நாள்களில் செய்யவேண்டும். எந்தெந்த நாள்களில் என்ன செய்யலாம் என்பது பற்றி திருமலைதிருப்பதி தேவஸ்தான பஞ்சாங்க ஜோதிட பிரகஸ்பதி பராசரம் பாலசுப்பிரமணியம் கூறும் தகவல்களின் தொகுப்பு இது.


குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கேற்ற நட்சத்திரங்கள்:                                                                                                              

குழந்தை பிறந்து 10, 12 மற்றும் 16வது நாளில் பெயர் சூட்டுவதற்கான சடங்கை மேற்கொள்வது நல்லது. திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் ஜாதகக் கட்டத்தில் எட்டாமிடம் சுத்தமாக இருக்கும் சுபமான லக்னங்களில், துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி மற்றம் திரயோதசி ஆகிய திதிகளில், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம்ம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று வருமாறு பார்த்து குழந்தைக்கு நாமகரணம் சூட்டுவது நல்லது.  ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகள் சிறந்தவை.



குழந்தையைத் தொட்டிலில் இடுதல்:

பச்சிளம் குழந்தைகள் ஒரு நாளைக்கு  பதினாறு மணி நேரம் தூங்குவது அவர்கள் உடல் வளர்ச்சிக்கு அவசியம். குழந்தைகள் ஓய்வுகொள்ள தொட்டிலிடும் நிகழ்ச்சி முக்கியம். அந்த நிகழ்ச்சியை குழந்தை பிறந்த 10, 12, 16, மற்றும் 22ம் நாளில் தொட்டிலில் இடுவது வழக்கம். இதற்கு ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, நட்சத்திரங்களும் துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி  ஆகிய திதிகளில் ஏதேனும் ஒன்றும் வருமாறு நாளைத் தேர்வு செய்யவேண்டும். அந்த நாளுக்கு சுபகோள்கள் பார்வையுள்ள லக்னமும் எட்டாமிட சுத்தமும் முக்கியம்.

அரைஞாண் கயிறு அணிவித்தல்:

வெள்ளி அல்லது பொன் அரை ஞாண் கயிற்றை புண்ணியாஹவசனம் செய்யும் நாளன்று அல்லது ஐந்தாவது மாதத்தில் கட்டலாம். அவ்வரைஞாணுடன் கருகமணி, செப்புக்காசு கட்டினால், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுப திதிகள், சுப லக்னத்தில் அரைஞாண் கயிறு அணிவித்தால், குழந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கும். எருக்கஞ்செடியின் நாரினால், அரைஞாண் கயிறு கட்டினால், குழந்தை அடிக்கடிப் பாலைக் கக்குவது நிற்கும் என பாட்டி வைத்தியம் கூறுகிறது.

அன்னம் ஊட்டுதல் (அமுதூட்டல்):

தாயமுதால் வளரும் குழந்தைக்கு சிறந்த உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த நாளைத் தேர்ந்தெடுப்பது மரபு. இது, 6, 8, 9 அல்லது     12-வது மாதத்தில் அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும் துவிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும்  திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இதற்கும் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னம் பலம் வாய்ந்ததாக இருத்தல் அவசியம்.


முடிக்காணிக்கை செய்வது எப்போது?

நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ  முடிக்காணிக்கை செய்யும் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.  இதை 3 அல்லது 5ம் ஆண்டு செய்வது வழக்கம். வளர்பிறை மிகவும் ஏற்றது. துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரியோதசி ஆகிய திதிகளிலும், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி,  உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளும், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய லக்னங்களும்  முடிக்காணிக்கை செய்வதற்கு ஏற்றவை. ஜாதகக் கட்டத்தில் எட்டாமிடம் சுத்தமாக இருத்தல் அவசியம். ஏழில் சூரியன், செவ்வாய் இருக்கக்கூடாது.


காது குத்தும் நிகழ்ச்சி:

உடல்நலத்துக்கு, வளர்ச்சிக்கும், நோய் நிவாரணத்துக்கும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. மிகவும் உயர்ந்த நிலையை எட்டிய நமது முன்னோர்கள் இதைக் கருத்தில்கொண்டுதான் காதுகுத்தும் நிகழ்ச்சியை குழந்தைப் பருவத்திலேயே செய்தனர். 6, 7 அல்லது 8 - ம் மாதத்தில் பகலில் செய்ய வேண்டும். இரண்டு திதிகள் இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும். மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களும் காது குத்தும் நிகழ்ச்சியை செய்வதற்கு ஏற்றவை.  ஜாதகக் கட்டதில் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும்.


கல்வி கற்க என்றைக்கு அனுப்ப வேண்டும்?

கல்வியின் சிறப்பைக் கூறுமிடத்து எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பார்கள். ஐந்தாவது வருடத்தில் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில்  செய்வது உத்தமம் எனப் பெரியோர்கள் கூறுவார்கள். அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி,  திருவோணம், அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, ஆகிய திதிகளும், மிதுனம், கடகம், மகரம், மீனம் ஆகிய லக்னங்களும் கல்வி கற்க பள்ளியில் சேர்க்க ஏற்றவை. ஜாதகக் கட்டத்தில்  நான்கு எட்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கக்கூடாது. லக்னத்தையும், நான்காமிடத்தையும் சுபகோள்கள் பார்த்தல் உத்தமம்.

No comments: