Nov 9, 2012

இந்து தர்ம சாஸ்திரம் !! நம்பிக்கையா? மூடநம்பிக்கையா?

 
 
சமீபத்தில் ஒரு இதழில் படித்தேன் இந்து தர்ம சாஸ்திரம் சில அறிவுரைகள் கூறிஉள்ளது ஒருவன் எப்படி இருக்க வேண்டும் எப்போது எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என இந்து தர்ம சாஸ்திரம் கூறுகிறது. இதைப்படிக்கும் போது சிறுவயதில் வீட்டில் உள்ள பெரியவர்கள் வடக்கில் தலை வைத்து  படுக்கக்கூடாது மேற்கில் தலைவைத்து தான் படுக்க வேண்டும் என என் வீட்டில் எனக்கு கூறியது ஞாபகம் வந்தது. இதில் கூறப்பட்டுள்ள நிறைய அறிவுரைகள் நம் வீட்டு பெரியவர்கள் நமக்கு கூறி இருக்க வாய்ப்பிருக்கிறது.

* இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

*
ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

*
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

*
அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

*
பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

*
குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

*
கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

*
நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

*
கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

*
எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

*
திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

*
சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

*
சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

*
கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

*
இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

*
சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

*
சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

*
மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

*
குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

*
தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது……-----------(ஸ்ஸ்ஸ்ஸ் முடியல...)

*
இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

*
தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

*
வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

*
மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

*
பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

*
ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

*
வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

*
ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

*
தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்…---------(சிகரட் புடிக்கிரவன்களே, கேட்டுக்கங்கப்பா..)

*
பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

*
பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

*
அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

*
ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

*
பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

*
பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

*
பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

*
பசு மாட்டை, "கோமாதா'வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

*
தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

*
பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.------ (நைட் சிப்டு வேலைக்குப் போறவங்களெல்லாம் என்ன செய்யனும். கொட்ட கொட்ட விழித்திருக்கனுமா ? வேலையை விட்டுடனுமா ?)

*
தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

*
அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

*
வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

*
நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

இதில் உள்ள அறிவுரைகள் இக்காலத்திலும் பின்பற்ற முடியுமா என்பது சந்தேகம் தான். இதில் பல, மூட நம்பிக்கையாகவும் தெரிகிறதுஇதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன்இந்த அறிவுரைகளை பின்பற்றுவது என்னைப் பொருத்தவரை இப்போது இருக்கும் வேகமான காலகட்டத்திற்கு முடியாது... ஆனால் இன்னைக்கு என்ன நமக்கு ஒத்து வருதோ அதெல்லாம் பாலோவ் பண்ணலாம்

இன்றைய காலகட்டத்தில் வேண்டியவற்றைக்கண்டிப்பாக எடுத்துக்கொண்டு, வேண்டாதவைகளை விரும்பினால் எடுத்துக்கொண்டு, விரும்பாவிட்டால் உதறிவிடுவதே நல்லது.







No comments: